Breaking News

புத்தளம் மாவட்ட பெண்களின் கைத்தொழில் புரட்சி, பெண் முயற்சிகளின் கண்காட்சியும் மலிவு விற்பனையும்.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்

முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பில் சேவை செய்துவருகின்ற அரச சார்பற்ற நிறுவனமாகும். 


குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 12 வருடங்களுக்கு மேலாக சேவை வழங்கி வருகின்றது.


முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட, பின்தங்கிய மற்றும் முன்னேற முயற்சிக்கும் பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்காக புத்தளம் மாவட்டத்திலுள்ள பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், நாளாந்த கூலி தொழிலில் ஈடுபடுகின்ற பெண்களில் 150 கும் மேற்பட்ட பெண்களை தெரிவுசெய்து அவர்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகளை வழங்கியதோடு கணக்கீடு, முகாமைத்துவம் மற்றும் பொதியிடல் பயிற்சியும் வழங்கப்பட்டது. 


மேலும் தொழிலை பதிவு செய்வதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் பிரதான அம்சமாக பயிற்றுவிக்கப்பட்ட சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை ஒன்றிணைத்து "PROMISE" என்ற வலையமைப்பு உருவாக்கப்பட்டு அதனை அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுடன் ஒன்றிணைக்கும் செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது. 


இறுதியாக புத்தளம் மாவட்ட பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதை நோக்காகக் கொண்டு முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் கடந்த காலங்களில் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும் மற்றும் புத்தளம் நகர மண்டபத்திலும் கண்காட்சி மிகச்சிறப்பாக நடைபெற்றிருக்கின்றன.


தற்போது மீண்டும் சிறு கைத்தொழில் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் (06,07) புத்தளம் நகர மண்டபத்தில் காலை 09.30 மணி தொடக்கம் இரவு 09.00 மணி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது. 


இக்கண்காட்சியில் கைத்தொழில் உற்பத்தி பொருட்களான உணவுப்பொருட்கள், திரை அச்சு, உணவுப்பதப்படுத்தல், பத்திக் பைகள், ஆயுர்வேத சவர்க்காரங்கள், சலவைத்தூள், கை கழுவும் திரவியம், எபொக்சி ரேசினால் தயாரிக்க கூடிய ஆபரணங்கள், அழகு சாதனப்பொருட்கள், தென்னை பாகங்களினால் உற்பத்தி செய்யப்படும் ஆபரணங்கள், தும்பினால் தயாரிக்கப்படும் பாபிஸ், தேங்காய் சிரட்டையினால் செய்யக்கூடிய ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள், வீட்டுப்பாவனை பொருட்கள் மற்றும் தேங்காய் பால், தேங்காய் துருவலினால் தயாரிக்கக் கூடிய உணவு வகைகள், உடனடியாக தயாரித்து வழங்கும் உணவுகள் ஆகிய உற்பத்திகள் சந்தைப்படுத்தப்படுத்தப்பட்டன.


இந்நிகழ்வை ஆரம்பிக்கும் முகமாக அதிதிகளாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத்,  கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பதில் துணைப் பணிப்பாளர் கயான் சமன்புர, புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ரனீஸ் பதியுதீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.











No comments

note