Breaking News

கற்பிட்டியில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

 ரஸீன் ரஸ்மின்

புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி உச்சமுனை மற்றும் கண்டல்குழி ஆகிய பகுதிளில் இருந்து பெருந்தொகையான பீடி இலைகள் நேற்று (08) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினர் குறித்த இரண்டு பிரதேசங்களிலும் விஷேட தேடுதல் நடவடிக்கைகளில்  ஈடுபட்டனர்.


இதன் போது, கற்பிட்டி கண்டல்குழி கடற்பிரதேசத்தில் மேற்கொண்ட விஷேட தேடுதலின் போது அங்கு 19 உர மூடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 642 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டது.


அத்துடன், கற்பிட்டி உச்சிமுனை கடற்பிரதேசத்தில் கடற்படையினர் விஷேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர் இதன்போது கடலில் மிதந்துகொண்டிருந்த பெரும் எண்ணிக்கையிலான உர மூடைகளை அவதானித்த கடற்படையினர் அதனை மீட்டு சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அதில் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


இதன்போது கடலில் மிதந்து வந்ததாக கூறப்படும் 86 உர மூடைகளில் இருந்து 2882 கிலோ பீடி இலைகள் இருந்துள்ளதுடன், அதனை கடற்படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்தனர்.


இதன்படி குறித்த இரண்டு பகுதிகளிலும் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது 105 உர மூடைகளில் 3524 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.


இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 3524 கிலோ கிராம் பீடி இலைகள் அடங்கிய 105 உரமூடைகளையும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேல் மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, புத்தளம் - எரம்புகொட களப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றில் இருந்து நேற்று (08) வியாழக்கிழமை 689 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






No comments

note