Breaking News

புத்தளம் சோல்ட்டன் காற்பந்தாட்ட கழகம் தனது கன்னிப்போட்டியில் கன்னி வெற்றியை பதிவு செய்துள்ளது.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் லெஜென்ஸ் காற்ப்பந்தாட்ட கழகத்துக்கும், புத்தளம் சோல்ட்டன் காற்பந்தாட்ட கழகத்துக்கும் இடையில் நடைபெற்ற சிநேகபூர்வமான காற்பந்தாட்ட போட்டியில் சோல்ட்டன் அணி வெற்றி பெற்றிருக்கின்றது.


இந்த போட்டி சனிக்கிழமை (31) மாலை புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.


புத்தளம் மன்னார் வீதி இரண்டாம் மைல் கல்லில் புதிதாக உதயமாகியுள்ள இந்த சோல்டன் காற்பந்தாட்ட கழகத்தின் முதலாவது கன்னிப் போட்டியாக இந்த போட்டி அமைந்திருந்தது. 


புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இவர்கள் கலந்துகொண்ட முதலாவது போட்டி இதுவாகும். 


இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக தமது அணியின் வீரர்களுக்கு மேலும் உற்சாகமும், மன தைரியமும் ஏற்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் புத்தளம் காற்பந்தாட்ட லீக்கில் தம்மை பதிவு செய்து கொள்ள பிரயத்தனங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் இந்த அணியை வழி நடாத்திய அணித்தலைவர் முஹம்மது இர்ஷாத் தெரிவித்தார்.


மேற்படி இந்த போட்டியிலே சோல்டன் அணியோடு புத்தளம் நகரின் 40 வயதுக்கு மேற்பட்ட வீரர்களை கொண்ட லெஜென்ஸ் அணி போட்டியிட்டதில் சோல்டன் அணி 02 : 01 கோல்களினால் வெற்றி பெற்றது.


லெஜன்ட்ஸ் அணியினரை அதன் ஸ்தாபக தலைவர் முஹம்மது யமீன் வழிநடாத்தி இருந்ததோடு போட்டியில் அணித்தலைவராக புத்தளம் காற்பந்தாட்ட லீக்கின் போட்டி தொடர் ஒருங்கிணைப்பாளரும், லெஜன்ட்ஸ் அணியின் சிரேஷ்ட வீரருமான எம்.ஜனூஸன் செயற்பட்டார்.


சோல்டன் அணிக்காக முஹம்மது ஜஹீன் 02 கோல்களையும், லெஜன்ட்ஸ் அணிக்காக எம்.ஏ.முஸ்தாக் 01 கோலினையும் பெற்றனர்.


போட்டிக்கு நடுவர்களாக எச்.எச்.ஹம்ருஸைன், ஏ.ஏ.கியாஸ், எம்.எஸ்.எம்.நௌபி ஆகியோர் கடமையாற்றினர்.




No comments

note