Breaking News

ஆனமடுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு

 ரஸீன் ரஸ்மின்

ஆனமடுவ,  தட்டேவ பிரதேசத்தில் இன்று (08) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.


ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


யானை நடமாட்டம் உள்ள பகுதியான குறித்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் , துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாக கூறப்படும் இடத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரம் வரை மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதாகவும், அதன் பின்னரே கீழே வீழ்ந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இதனையடுத்து, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆனமடுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், அவர் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என பொலிஸார் கூறினர்.


தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


இந்த சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸாருடன் இணைந்து புத்தளம் தடயவியல் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




No comments

note