Breaking News

தாரிக் அஹமடிற்கு நீதி கேட்டு அலி ஸாஹிர் மௌலானாவின் JusticeForThariq Twitter பதிவு தேசியத்தையும் தாண்டி, சர்வதேசத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அளுத்கம, தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயதான விஷேட தேவையுடைய இளைஞன் தாரிக் அஹமட் வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு வந்தவேளை பொலிஸாரினால் மிகவும் கொடூரமாகத் தாக்கப்பட்டார். மூளை வளர்ச்சி குறைபாட்டு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் தாரிக்கிற்கு சடுதியாகப் பேசக் கூடிய திறனில்லாதவராக இருந்தமையாலும் பொலிஸாரின் கேள்விகளுக்கு அவரால் உடன் பதிலளிக்க முடியவில்லை. இதனால் பொலிஸார், துவிச்சக்கர வண்டியை தள்ளி அவரை வீழ்த்தினர். சம்பவ இடத்திலிருந்த ஒருவர், இவரது பெயர் தாரிக் அஹமட், இவர் ஒரு விஷேட தேவையுடைய இளைஞர் என்று கூறியதும் (அவர் ஒரு முஸ்லிம் என்பதை தெரிந்துகொண்டதும்) மிகவும் கடுமையாகவும், ஈவிரக்கமில்லாத வகையிலும் அவரைத் தாக்க ஆரம்பித்தனர். 6 பொலிஸார் 2 சிவிலியன்கள் என சுமார் 8 பேரளவில் தாரிக்கை சரமாரியாகத் தாக்கினர்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தந்தை, கைகால்கள் பிணைக்கப்பட்ட நிலையிலும், உடல் முழுக்கக் காயங்களுடனும் துடித்துக்கொண்டிருந்த தனது மகனைக் கண்டதும் கதறியழுதார். தனது மகன் மூளை வளர்ச்சி குன்றிய ஒருவர் அவரை விடுவியுங்கள் என்று பொலிஸாரிடம் மன்றாடினார். இதை பெரிதுபடுத்தக்கூடாது என்ற அச்சுறுத்தல் எச்சரிக்கையுடன் தாரிக்கை அவனது தந்தையிடம் பொலிஸார் ஒப்படைத்தனர். தாரிக்கின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்றார். ”மனநலம் குன்றிய இளைஞனை வெளியே நடமாட விட்டது உங்களது தவறு…” என்று குற்றம் சுமத்தி அவரைத் திருப்பியனுப்பினர்.
அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம், களுத்துறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அலுவலகம் என்பவற்றிலும் முறைப்பாடு செய்யப்பட்டு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

பல நாட்கள் கழிந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை அறிந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா #JusticeForThariq என்று Twitter தளத்தில் ஹேஸ் # Tag பதிவொன்றை உருவாக்கி,“தாரிக்கிற்கு நீதி கிடைக்கவேண்டும்” என்னும் தொனியில் ஒரு செயற்திட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.
இந்த செயற்திட்டத்தை ஆரம்பித்து சில மணித்தியாலயங்களில், அது தேசம் தாண்டி சர்வதேச அளவிலும் தீயாய் பரவத் தொடங்கியது. நாமல் ராஜபக்‌ஷ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன உள்ளிட்ட பிரபலமான அரசியல் தலைவர்கள், பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், சமூக ஆர்வலர்கள் போன்ற ஆயிரக்கணக்கானவர்கள் அந்த பதிவிற்கு ஆதரவாக ஹேஸ்  Tag பதிவுகளை இட்டு அலி ஸாஹிர் மௌலானாவுடன் மும்முரமாக இணைந்து செயலாற்ற ஆரம்பித்திருந்தார்கள்.
நேற்று காலை Twitter ஊடாக எழுப்பப்பட்ட நீதிக்கான குரல் தேசியத்தையும் தாண்டி, சர்வதேசத்தையும் உசுப்பி விடப்பட்டுள்ளது, உலகளாவிய விழிப்பின் ஊடாக நீதிக்கான போராட்டம் வலுக்கிறது.
அமெரிக்காவில் பொலிஸார் மேற்கொண்ட இனவாத செயற்பாடுகளுக்கெதிராக குரல் கொடுக்கும் நாங்கள், எமது நாட்டில் சிறுபான்மையினருக்கெதிராக நடத்தப்படும் இவ்வாறான மிலேச்சத்தனமான இனவாத செயற்பாடுகளுக்கெதிராகவும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க முன்வரவேண்டும். அநியாயமிழைக்கப்படுபவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தவறினால் நாமும் குற்றவாளிகளாவோம்.

இதேவேளை, நேற்று மாலை அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் பாதிக்கப்பட்ட இளைஞன் தாரிக்கின் வீட்டுக்குச் சென்றார். குறித்த சம்பவத்தினால் மிகவும் இறுக்கமான நிலையிலிருந்த தாரிக் அலி ஸாஹிர் மௌலானாவை கண்டதும் சந்தோசமான மன நிலைக்கு மாறிவிட்டார். அவரது அருகில் அமர்ந்து விளையாடி அந்த சிறுவன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மிகவும் கலகலப்பாக இருந்தார்.

அந்தப் பிள்ளையுடன் கழித்த அந்த சொற்ப நேரம் எனக்கு மிகுந்த சந்தோசத்தினையும், திருப்தியையும் தந்தது. உண்மையில் அந்த ஏழை சிறுவனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான குரல் ஓங்கி வரும் நிலையில் அதற்கான நியாயம் கிடைக்கும் என முழுமையாக எதிர்பார்க்கிறேன்என முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.








No comments