Breaking News

ஜூன் 15 முதல் பள்ளிவாசல்கள் திறக்கப்படும், கூட்டு அமல்களுக்கு அனுமதியில்லை - இலங்கை வக்ப் சபையினால் வழிகாட்டல்கள்

வணக்கஸ்தலங்கள் தொடர்பில் கடந்த மே மாதம் 27ஆம் திகதி சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்கள் மட்டும் கட்டுப்பாடுகளுக்கு அமைய, எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் பள்ளிவாசல்களை திறக்க அனுமதி வழங்கப்படுவதாக, இலங்கை வக்ப் சபை அறிவித்துள்ளது.


தனிமைப்படுத்தப்பட்ட அல்லது கட்டுப்பாடுகளுடனான பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில், தனித்தனியாக தொழுவதற்காக பள்ளிவாசல்கள் திறக்கப்படும் என, வக்ப் சபை மேலும் தெரிவித்துள்ளது.


ஏற்கனவே எதிர்வரும் மே மாதம் 09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் சுகாதாரப் பிரிவினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆயினும் வக்ப் சபை ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் பள்ளிவாசல்களை திறப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.


அதற்கமைய, வழமையான ஐவேளை மற்றும் ஜும்ஆ கூட்டுத் தொழுகைகள் உள்ளிட்ட விசேட கூட்டுத் தொழுகைகளுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், நிகாஹ் (திருமணம்) மஜ்லிஸ் உள்ளிட்ட கூட்டு நிகழ்வுகளும் மறு அறிவித்தல் வரை அனுமதிக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வுழூ செய்யும் பகுதி, மலசலகூட பகுதிகள் மூடப்பட்டிருக்கும் என்பதால், வீடுகளிலிருந்து வுழூ செய்து கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அத்துடன் நுழைவாயிலில் கைகளைக் கழுவுவதற்கான வசதிகளை செய்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஒவ்வொருவரும் தொழுகைக்கான விரிப்பை (முஸல்லா) கொண்டு வந்து, கையுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தரை விரிப்புகள் (கார்பட்) போடப்பட்டுள்ள பகுதிகளில் தொழ அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


தொழுகைக்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் பள்ளிவாசல்களை திறந்து, தொழுகையின் பின்னர் 45 நிமிடங்களில் பள்ளிவாசல்களை மூடுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.





No comments