கொரோனாவால் உயிரிழப்பவர்களை சமய முறைப்படி அடக்க அனுமதிக்க வேண்டும்; - புத்தளம் நகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்..!
கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் உடல்களை அவரவர் சமய முறைப்படி அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அரசாங்கத்தைக் கோரும் தீர்மானம் புத்தளம் நகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புத்தளம் நகர சபையின் மாதாந்த சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (12) பதில் நகர சபை தலைவர் புஷ்ப குமார தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றபோதே இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பிலான பிரேரணையை மு.கா. நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். றபீக் சமர்ப்பித்திருந்தார்.
கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வது எமது மார்க்கத்திற்கு முற்றிலும் முரணான செயற்பாடாகும். இதனால் முஸ்லிம்கள் மிகவும் வேதனையடைகின்றனர். ஆகையினால் யாராக இருந்தாலும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தால், அவர்களை, அவரவர் சமய முறைப்படி அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று உறுப்பினர் எம்.எஸ்.எம். றபீக் இதன்போது வலியுறுத்தினார்.
இதனையடுத்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இப்பிரேரணையை ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் போன்றோருக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க்கப்பட்டுள்ளது.
புத்தளம் நகர சபையே முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக முதலாவதாக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments