Breaking News

பல்துறை ஆளுமை மிக்கவர் ஏ.ஆர்.௭ம். ஜிப்ரி - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்

பல்துறை ஆளுமை மிக்க மறைந்த ஏ.ஆர்.எம். ஜிப்ரி இலங்கையில் மட்டுமல்லாது, தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் ஏனைய நாடுகளிலும் நன்கு அறியப்பட்ட ஒருவராக தடம் பதித்தவர் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மறைந்த நண்பர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி கல்வியியலாளராகவும், ஊடகவியலாளர் என்ற முறையில் ஒலிபரப்பாளராகவும், ஒளிபரப்பாளராகவும், எழுத்தாளராகவும் ஒருசேர உரிய பங்களிப்பைச் செய்திருக்கின்றார். தமது பிற்காலத்தில் அரசியலிலும் ஓரளவு ஈடுபாடு காட்டி வந்தார்.

அவர் பங்களிப்பு நல்கிய அனைத்துத் துறைகளிலும் அன்னாரின் சன்மார்க்கப்பற்றும் சமூக நலனும் ஆழமாக இழையோடியிருந்தன. எப்பொழுதும் புன்னகை பூத்த முகத்துடன் காணப்பட்ட மர்ஹூம் ஜிப்ரி எல்லோருடனும் மனம்விட்டுப் பழகினார்.

மிகவும் ஜனரஞ்சகமான கல்விமான் ஒருவரை, கலை இலக்கியவாதியை எங்கள் மத்தியிலுருந்து இழந்துவிட்ட நிலையில், அன்னாரின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திப்போமாக.

மர்ஹூம் ஜிப்ரியின் மனைவி, புதல்வர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் தனிப்பட்ட முறையிலும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு அவரது அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

note