Breaking News

அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் மறைவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர் நஸீர் அஹமட் அனுதாபம்

ஓய்வுபெற்ற அதிபரும் இலங்கை வானொலி தமிழ்ச் சேவையின் அறிவிப்பாளருமான, நண்பர் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் மறைவினால் துயருறும் அன்னாரது குடும்பத்தினருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர் வெளியிட்டுள்ள அனுதாபக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வானொலி அறிவிப்புத்துறையில் தனக்கென ஓரிடத்தைத் தக்கவைத்துக் கொண்டு கல்வித் துறையிலும் பங்களிப்புச் செய்த ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் இழப்பும் ஈடு செய்ய முடியாததாகி விட்டது.

குறிப்பாக அவரால் பாடசாலையிலும் வானொலி மூலமாக நாடாளாவிய ரீதியிலும் அறிவூட்டப்பட்ட பல நூற்றுக்கணக்கானோர் அவரது மறைவு குறித்து துயரம் கொண்டுள்ளனர்.
அவர் விட்டுச் சென்ற பணியை அவரால் வழிகாட்டப்பட்டவர்கள் தொடரவும் அவரது மறுமை வாழ்வு சிறக்கவும் தான் பிரார்த்திப்பதாக அந்த அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த ஏ.ஆர்.எம். ஜிப்ரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் திங்கட்கிழமை 20.01.2020 இரவு 11.30 மணியளவில் காலமானார்.
இவர் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஜனரஞ்சகமான அறிவுக் களஞ்சியம் நிகழ்ச்சியை பலகாலமாக நடத்தி மாணவர்களின் அறிவுத் தேடலுக்கு உசாத்துணையாக இருந்தார் என்று நேயர்கள் தெரிவிக்கின்றனர்.


No comments

note