Breaking News

அஷ்ஷைக் பவாஸ் அப்பாஸீ, மதனீ கலாநிதி பட்டப்படிப்பிற்குத் தெரிவு!

அஷ்ஷைக் பவாஸ் அப்பாஸீ, மதனீ அவர்கள் சவூதியின் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கலாநிதி கற்கைக்குத் தெரிவாகியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ். இவர் இலங்கையின் குருனாகல் மாவட்டத்தில் பந்தாவ பிரதேசத்தில் அமைந்துள்ள பங்களவத்த எனும் ஊரில் முஹம்மத் ராஸிக் மற்றும் சித்தி நிபாயா தம்பதியினருக்கு ஐந்தாக பிள்ளையாக பிறந்தார். அத்துடன் இவருக்கு மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை பொல்கஹவல-மடலகமையில் அமையப்பெற்றுள்ள கு/அல் இர்பான் மத்திய கல்லூரியில் ஒன்பதாம் தரம் வரை கற்றார். பின்னர் ஷரீஆ துறை கற்கையை மிகுந்த ஆவலுடன் தொடரும் நோக்கில் 1998ம் ஆண்டு குருனாகல்-சியம்பலாகஸ்கொடுவ எனும் ஊரில் பிரசித்திபெற்று விளங்கும் அன்னஹ்ஜதுல் இர்பானிய்யா அரபுக் கல்லூரியில் இணைந்து அங்கு நான்கு வருடங்கள் சிறப்பாக கற்றதுடன் தொடர்ந்து காலி-இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் சேர்ந்து தனது மேற்குறித்த கற்கையை அதி திறமை சித்தியுடன் கற்று, நிறைவுசெய்து 2006ம் ஆண்டு பட்டம்பெற்று வெளியேறினார்.

கற்ற கல்வியை கற்றுக் கொடுக்கும் முகமாக காலி-கிந்தோட்டையிலுள்ள அல்பயான் அரபுக் கல்லூரியில் தனது கன்னி ஆசிரியர் பணியைத் தொடங்கி அங்கு சுமார் ஏழு மாதங்கள் பணியாற்றினார். இருந்தும் தான் கற்ற பாசறையில் கற்பிப்பதற்கு தெரிவுசெய்யப்பட்டதையடுத்து மீண்டும் இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் ஓர் ஆசிரியராக பிரவேசிக்கும் பேற்றைப் பெற்றார். அங்கு சுமார் மூன்றரை வருடங்கள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் மேற்படிப்பு நிமித்தம் சவூதியின் மதீனா நகரில் சர்வதேச மாணவர்களுக்காக தனித்து நிறுவப்பட்டுள்ள மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு இறையருளால் 2010ம் ஆண்டு தெரிவானார்.

2010 ம் ஆண்டு كلية اللغة العربية அரபு மொழி பீடத்தில் இணைந்து அங்கு நான்கு வருடங்கள் கொண்ட விசேட கற்கையை திறமையுடன் கற்று இளமாணி பட்டப்படிப்பை நிறைவுசெய்தார். இவருக்கிருந்த கல்வித் தாகம் விடாது மேலும் கற்பதை ஊக்குவித்ததன் வெளிப்பாடாக தொடர்ந்து பன்னாட்டு மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற முதுமாணி கற்கைத் தெரிவுக்கான போட்டிப் பரீட்சையில் தோற்றி, சித்தியடைந்து மிகச் சிறந்த புள்ளிகளைப் பெற்று அரபு இலக்கிய (الأدب والبلاغة) பிரிவில் முதுமாணி கற்கைக்குத் தெரிவானார்.

முதுமாணி கற்கையில் தனது ஆய்வுக்காக   الصورة البيانية في ديوان معاوية بن أبي سفيان (رضي الله عنه)  எனும் தலைப்பை தெரிவுசெய்து, அதனை மிகச் சிறப்பாக மேற்கொண்டு சமர்ப்பித்ததையடுத்து பேராசிரியர்களால் அதி திறமை சித்தி தரம் வழங்கி கௌரவிக்கப்பட்டு தனது முதுமாணி கற்கையை அண்மையில் 10/12/2019ம் ஆண்டு நிறைவுசெய்தார்.

இத்தொடர் பயணத்தின் அடுத்த கட்டமாக மேற்குறித்தவாறு சர்வதேச நாட்டு மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற கலாநி பட்டப்படிப்புத் தேர்வுக்கான போட்டிப் பரீட்சையில் பங்குபற்றி சிந்த பெறுபேறுகளைப் பெற்று அரபு இலக்கியப் பிரிவில் ( الأدب والبلاغة) கலாநிதி கற்கைக்காக தெரிவுசெய்ப்பட்டுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்

இவர் இவ்வளவு அடைவுகள் அடைந்திருப்பது அதிகமாக திருமணம் முடித்த பின் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்தனை உயர் இலக்குகள், அடைவுகளுக்கு முதற் காரணம் பேரருளாளன் அல்லாஹ் ஒருவனே, அடுத்தாத பக்கபலமாக நின்றவர் அவரது துணைவி என்று கூறினால் ஒரு போதும் மிகையாகாது. (மனைவி பின்பாஸ் மகளிர் அரபுக் கலாசாலையில் பட்டம்பெற்ற ஓர் ஆலிமா) மேலும் கூறுமிடத்து இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.

இவருக்கு அல்லாஹ் வழங்கிய அறிவு மற்றும் ஆற்றல்களில் குறிப்பாக அரபு மொழிப் புலமை, அரபுக் கவியடிகளை நொடிப் பொழுதில் ஆழ்ந்த அர்த்தமுள்ள சொற்களை பிரயோகித்து உருவாக்கும் திறமை என்பவற்றை இவருடன் ஒன்றாகப் படித்தவர்கள், கற்பித்த ஆசிரியர்கள், நேரில் கண்டவர்களுக்குத் தெரியும். நான் பல தடவை இவரது கவிதைகளை வாசித்து வியந்தது மட்டுமல்லாது நொடிப் பொழுதுகளில் அரபுக் கவியடிகளை உருவாக்கும் திறமையைக் கண்டு பிரமித்துள்ளேன்.

மார்க்க அறிவு, அரபு இலக்கண, இலக்கிய, கவிநய அறிவு, இளமாணி மற்றும் முதுமாணி பட்டங்கள் என்பவை தன்னில் கொண்டிருந்தும் எப்பொழுதும் பெருமையில்லாது, பணிவு கலந்த அடக்கத்துடன் தனக்கேயுரிய முறையில் சிரித்த முகத்துடன் அனைவருடனும் பழகும் தன்மை கொண்டவர்.

இவரது அறிவிலும் ஆயுளிலும் மென்மேலும் பரகத் சுரந்து, கலாநிதி கற்கையையும் அதிசிறந்த சித்தியுடன் நிறைவுசெய்து, கற்ற கல்வியின் மூலம் தானும் மற்றவர்களும் பயனடைந்து சிறந்த எதிர்காலத்துடன் வளமான ஆரோக்கியமான வாழ்வு பெற்று சிறக்க வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

நட்புடன்
அஸ்(z)ஹான் ஹனீபா
21/01/2020



No comments

note